வாஷிங்டன் : அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ என்ற பெயரில் ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தப் போட்டியில் இந்த வருடம் இந்திய வம்சாவளி மாணவி அனன்யா வினாய் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.
அமெரிக்காவில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ எனப்படும் ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவ, மாணவிகள் சாம்பயின் பட்டம் வென்று வந்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
பலத்த போட்டி
இந்த ஆண்டுக்கான போட்டி வாஷிங்டன் புறநகரில் நடைபெற்றது. இந்த ஆங்கில எழுத்து கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மமாணவி அனன்யா வினய்க்கும், மாணவர், ரோகன் ராஜீவுக்கும் இடையே நீயா, நானா? என்கிற அளவில் பலத்த போட்டி நிலவியது.
13வது முறை இந்திய வம்சாவளியினர் சாதனை
முடிவில் அனன்யா வினய் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இந்த சாம்பியன் பட்டம் தொடர்ந்து 13வது ஆண்டாக இந்திய வம்சாவளியினரால் வெல்லப்பட்டுள்ளது. இது 40 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 26 லட்சம்) ரொக்கப்பரிசு, கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியதாகும்.
சாம்பியன் பட்டம்
மராகெயின் என்ற வார்த்தையை மிகச்சரியாக எழுத்துக் கூட்டி எழுதி, அனன்யா வினய் சாம்பியன் பட்டம் வென்றார். மராகெயின் என்பது பட்டு அல்லது ரேயான் கொண்டு தயாரிக்கப்படுகிற உடை ஆகும்.
கனவு நனவானது
12 வயதான அனன்யா வினய் 6வது கிரேடு மாணவி, கலிபோர்னியாவில் பிரெஸ்னோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சாம்பியன் பட்டம் வென்றது குறித்து இவர் கூறும் போது, இது ஒரு கனவு நனவானது போன்றதாகும். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் எனக்கு கூறுப்படுகிற வார்த்தையில் கவனமாக இருந்து சரியான எழுத்துக் கூட்டினேன் என்று கூறியுள்ளார்.