சென்னை : மருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அது போல பொறியியல் படிப்பிற்கும் தேசிய தகுதித் தேர்வு வரும் கல்வி ஆண்டு அல்லது அடுத்த கல்வியாண்டு முதல் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது சிபிஎஸ்இ.
இந்த ஆண்டு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குத் தேசிய அளவில் தகுதித்தேர்வை நடத்தி இருக்கிறது மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொறியியல் படிப்புக்குத் தேசிய அளவில் தகுதித்தேர்வை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது.
மாணவ மாணவியர்களே மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல பொறியியல் படிப்பிற்கும் வருகிறது தேசிய தகுதித் தேர்வு.
ஏஐசிடிஇ அனுமதி
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) இந்த ஆண்டே அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் சில மாநிலங்களில் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
2019-2020 கல்வியாண்டில் தேசிய தகுதித் தேர்வு
ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் அனில் டி சாகஸ்ரபுது தற்போது, மாநில அரசுகளுடன் நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம். மாநில அரசின் ஒப்புதலோடு 2019-2020 கல்வியாண்டில் பொறியியல் படிப்பிற்கும் நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு நடத்தப்படும். என தெரிவித்துள்ளார்.
தனி பயிற்சித் திட்டம்
ஏஐசிடிஇ சில திட்டங்களைப் பொறியியல் கல்லூரிகளில் செயல்படுத்த தீர்மானித்துள்ளது. இதில் கிராமப்புறங்களில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கும், மாநில மொழிகளில் படித்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் தனி பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அது அவர்களுக்கு பொறியியல் படிப்பை திறம்பட படிக்க வழிசெய்யும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களுக்கு பயிற்சித் திட்டம்
தனி பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவு மேம்படுத்தப்படும், உயர் கல்வி முறைகளும் மேம்படுத்தப்படும். மேலும் பொறியியல் கல்லூரியில் புதிதாக வேலைக்குச் சேரும் விரிவுரையாளர்களுக்கு நான்கு முதல் ஆறு வாரக் கால பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், பொறியியல் படிப்பில் கேள்வித்தாள்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் அனில் டி சாகஸ்ரபுது தெரிவித்துள்ளார்.