சென்னை : 4362 ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 30 மே 2015ல் நடந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் 24 மார்ச் 2017 அன்று வெளியானது. ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை ஞாயிறு முதல் 11ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது,
ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் 9 ஏப்ரல் 2017 முதல் 11 ஏப்ரல் 2017 வரை நடக்கவிருக்கிறது.
ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ் நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு 31 மைங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது பட்டியல் இணையதளத்திலும் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. கடிதம் பெற்றவர்கள் மற்றும் இணையதள பட்டியலில் இடம் பெற்றவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு நாளை முதல் செல்ல வேண்டும்.
மதிப்பெண்கள்
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2 ஆண்டு வரை காத்திருப்போருக்கு 2 மதிப்பெண்கள், 4 ஆண்டு காத்திருப்போருக்கு 4 மதிப்பெண்கள், ஆறு ஆண்டு காத்திருப்போருக்கு 6 மதிப்பெண்கள், 8 ஆண்டு காத்திருப்போருக்கு 8 மதிப்பெண்கள், 10 ஆண்டுக்கு மேல் காத்திருப்போருக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
முன் அனுபவம்
ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. முன் அனுபவம் உள்ளவர்கள் அதற்கான அனுபவச் சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
டிப்ளமோ படித்தவர்களின் கோரிக்கை
'பத்தாம் வகுப்பு முடித்த பலர் கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில் டிப்ளமோ முடித்துள்ளனர். பட்ட படிப்புக்கு வழங்குவது போல, டிப்ளமோ படித்த தங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என அவர்கள் கோரி உள்ளனர்.
போலி சான்றிதழ்
ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படுவதால், பல பள்ளி, கல்லுாரிகளில் பணம் வாங்கிக்கொண்டு, போலி சான்றிதழ் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. எனவே பணி அனுபவ சான்றிதழை, பள்ளி, கல்லுாரிகளின் ஆவணங்களில் சரிபார்க்க அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.