சென்னை : சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தினைக் கொண்ட பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கேரள அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியான மலையாளத்தில் சரிவர எழுதப் படிக்க தெரியவில்லை என கல்வியாளர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகத்தான் கேரள அரசு அனைத்துப்பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மலையாளம் கட்டாயம்
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடப்பிரிவு கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல்
முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இந்த கல்வியாண்டு முதலே சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாக அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதாகவும், மலையாளம் பேசுவது தடை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் பள்ளிகளில் மலையாளம் பேசக்கூடாது, எழுதக் கூடாது என அறிவிப்பு பலகை எதுவும் வைக்கக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
அபராதம்
இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பள்ளி நிர்வாகங்கள் மலையாளம் கட்டாயம் என்ற சட்டத்தினை மீறினால் அவர்களுக்கு ரூ. ஐயாயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள பாடம் பயிற்றுவிக்காத பள்ளிகளுக்கு தடையில்லாத சான்று வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநில மாணவர்களுக்கு மலையாளம் கட்டாயமில்லை
மற்ற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மலையாளம் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.