சென்னை : வறட்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சத்துணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கோடை விடைமுறையிலும் சத்துணவு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சத்துணவு கோடை விடுமுறையிலும் வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ள மாணவ மாணவியர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று சத்துணவு உண்ணலாம் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுக் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி விருப்பம் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு நடைமுறை
1 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவர்களுக்கு மத்திய அரசின் நடைமுறைப்படி சத்துணவு வழங்கப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவர்களுக்கு மாநில அரசின் நடைமுறைப்படி சத்துணவு வழங்கப்படுகிறது.
40 ஆயிரம் பேருக்கு மதிய உணவு
மதிய உணவு வழக்கம் போல் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மாணவ மாணவியர்கள் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். நேற்றில் இருந்து மதிய உணவு வழங்கப்படுகிறது.
வருகைப்பதிவேடு
மதிய உணவு சாப்பிட வரும் மாணவ மாணவியர்களுக்கென தனி வருகைப் பதிவேடு பின்பற்ற படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டை இருப்புக் குறித்து நாள்தோறும் அறிவிக்கவேண்டும் எனவும் சத்துணவு மைய அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையான உணவுப் பொருட்களை நுகர் பொருள் வாணிபக் கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.