சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி இறந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பள்ளக்கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில் 25 சதவீத பணியிடங்கள் தமிழ் நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ் கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி 82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.
பணி நியமனம்
அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்ப்டடு உயிரிழந்த ஊழியர் ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு 2016-2017ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிர்ணயம் செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிர்ணயம் செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப அரசாணை வெளியிட்டது.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள்
அதன் படி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்த்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் 7 பேருக்கு ஆணை
அதன் அடையாளமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5ந் தேதியன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில் 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆர். இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் எஸ். கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.