சென்னை : எஸ்எஸ்சி மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பல்முனை உதவியாளர்கள் தேர்வினை இம்மாதம் 30 மற்றும் மே 7, 14 அல்லது 28ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
எஸ்எஸ்சி தேர்விற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை மற்றும் பதிவு எண் போன்ற விபரங்களை www.ssc.nic.in அல்லது www.sscsr.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் தங்கள் அனுமதிசீட்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எஸ்எஸ்சி தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் போட்டியாளர்களுக்காக சில டிப்ஸ்!..
1. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் முதலில் நீங்கள் எழுதும் தேர்விற்கான பாடத்திட்டங்கள் பற்றி போதிய அறிவினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
2. போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் போதே அதில் பாடத்திட்டங்களும், அதற்கான மதிப்பெண்கள் பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அறிவிப்பை நன்றாகப் படித்து தேர்வுப்பற்றிய முழுவிபரத்தையும் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பின்பு அதற்கேற்ப உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.
3. போட்டித்தேர்வுகளை எழுதுபவர்கள் முதலில் விரைவாக மற்றும் சரியாக எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். விரைவாக எழுத வேண்டியது மிகமிக அவசியம். அதே நேரத்தில் சரியாகவும் எழுத வேண்டும். இந்த திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது எல்லாவித போட்டித்தேர்வுகளையும் எளிதாக அனுக முடியும்.
4. எஸ்எஸ்சி தேர்வினைப் பொறுத்தவரையில் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். அதாவது ரீசனிங் எபிலிடியில் 25 கேள்விகள், கணிதத்தில் 25 கேள்விகள், ஆங்கிலத்தில் 50 கேள்விகள் மற்றும் பொது அறிவியலில் 50 கேள்விகளும் கேட்கப்படும்.
5. எஸ்எஸ்சி தேர்வில் கேட்கப்படும் 150 கேள்விகளுக்கு 2 மணி நேரம் வழங்கப்படும். போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரையில் நேர மேலாண்மை என்பது மிகமிக முக்கியமான ஒன்று. 2 மணி நேரத்தில் 150 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்றால் ஒரு கேள்விக்கு 48 வினாடிக்குள் பதில் அளிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
6. நான்கு பகுதிகளில் இருந்து எஸ்எஸ்சி தேர்விற்கு கேள்விகள் கேட்கப்படும். நான்கு பகுதியிலும் எளிதான மற்றும் கடினமான கேள்விகள் கேட்கப்படும். எளிதான தெரிந்த கேள்விகளை முதலில் எழுதி விடுங்கள். தெரியாதவற்றை யோசித்து எழுதுங்கள்.
7. எஸ்எஸ்சி தேர்வில் எதிர்மறை மார்க்குகள் உண்டு. எனவே தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அல்லது நன்கு யோசித்து அதற்கு சம்பந்தமான பதிலை தேர்வு செய்யவும்.
8. எளிதான கேள்விகளுக்கு நேரம் சற்று குறைவாக எடுத்துக் கொண்டு எழுதினால் அதில் உள்ள மீதி நேரத்தை கடினமான கேள்விகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு எழுதும் போது ஏதாவது தெரியவில்லை அல்லது மறந்து விட்டது என்றால் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல் அடுத்த கேள்விக்குச் சென்றுவிடுங்கள்.
9. தேர்வுக்குத் தேவையான அனுமதிச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை முந்தைய நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேர்விற்கு முந்தைய நாள் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு தேர்வு நாளன்று ரிலாக்சாக தேர்வுக்குச் செல்லுங்கள்.
10. தேர்வு நாளின் போது கட்டாயம் காலை உணவை சாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லுங்கள். தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்வது பதட்டத்தை தவிர்க்க உதவும்.