சென்னை : கேட் தேர்வு எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு எளிதான தேர்வு அல்ல. கடினமாகத் தேர்வுகளில் ஒன்றாகும். கேட் தேர்வு இளங்கலை பொறியியல், தொழில் நுட்பம், கட்டிடக்கலை மற்றும் முதுகலை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. கேட் தேர்விற்கு முயற்சிக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் முயற்சி எடுததுப் படிக்க வேண்டும். கேட் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக் குறித்த ஒரு ஆழமான அறிவுக் கட்டாயம் இருக்க வேண்டும்.
கேட் தேர்விற்கான சில டிப்ஸ்கள் -
கேட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பாட அமைப்பு மற்றும் பாடத் திட்டங்களை நன்கு அறிந்து கொண்டு பின்பு அதற்கேற்றாற் போல் தயாராகுதல் வேண்டும்.
கேட் தேர்விற்கு ஒரு தனிநபர் அவருடைய உளச்சார்வு, அடிப்படை, அணுகுமுறை, செறிவுநிலை, நேரம், அகநிலை போன்றவற்றைப் பொருத்தே தயாராக முடியும். பொதுவாக 4 முதல் 6 மாதங்கள் வரை கடினமாக முயற்சி செய்துப் படித்தால் கட்டாயம் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடி போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துப் படிக்கலாம்.
கேட் தேர்விற்கான சிறந்த குறிப்பு புத்தகங்களை வாங்கி தேர்விற்கு தயாராக வேண்டும். முழுமையான பாடத்திட்டம் மற்றும் மாதிரிவினாத்தாள்களைக் கொண்ட குறிப்புப் புத்தகத்தினை வாங்க வேண்டும். மேலும் அதில் தீர்க்கப்பட்ட மாதிரி வினாத்தாள் உள்ளனவா என ஆய்வு செய்து வாங்கவும்.
அனைத்துப் பாடத்திட்டங்களும் அடங்கும் வகையில் ஒரு பட்டியலைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் படித்தவற்றை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பாடத்திட்டங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்ட பாடத்திற்கு அதிக நேரம் எடுத்துப் படிக்க வேண்டும்.
அனைத்து பாடத்திட்டத்தையும் வாசித்து அதில் உள்ள முக்கிய குறிப்புகளை ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு தேர்வின் இறுதி நேரத்தில் ரிவிசன் விடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புறநிலை வகைக் கேள்விகளை முதலில் எழுத வேண்டும். எண் சம்பந்தப்பட்ட கேள்விகளை கவனமாக செய்ய வேண்டும். வேகமாகவும் துல்லியமாகவும் செய்வதற்கு ஏற்றாற்போல் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உங்களால் பாடத்திட்டத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டால் நீங்கள் எந்தெந்தப் பாடங்கள் முக்கியமானவை என்பதனை தேர்வு செய்து கொண்டு அந்தப் பாடங்களில் உள்ள அனைத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நல்ல பயிற்சி மையம் ஒன்றினை தேர்வு செய்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் படித்துப் பாடங்களை எழுதிப் பார்க்கும் போது ரஃப் பேப்பர்களில் எழுதிப் பார்க்க கூடாது. தனியாக நோட்டுப்போட்டு அதில்தான் எழுதிப் பார்க்க வேண்டும். அது உங்களுக்கு தேர்வில் கைகொடுக்கும்.
கடந்த வருடத்தில் நடந்த மாதிரிவினாத்தாளைப் பயன்படுத்தி படிக்கும் போது உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்ள உதவும். குறைந்தது 10 வருடத்திற்குரிய மாதிரிவினாத்தாள்களை வைத்துப் படிக்கும் போது உங்களுக்கு மிகவும் நல்ல பயனைத் தரும்.
நீங்கள் தேர்விற்கு 1 மாதத்திற்கு முன்னதாகவே அனைத்துப் பாடத்திட்டங்களையும் படித்து முடித்து விடுங்கள். ஒரு மாத காலம் இருக்கும் போது ரிவிசன் செய்ய ஆரம்பித்து விடுங்கள்.
ரிவிசன் விடும் போது ஏற்கெனவே குறிப்பு எடுத்து வைத்துள்ளதை படியுங்கள். மேலும் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட எண் சார்ந்த கேள்விகளை மறுபடியும் தீர்த்துப் பாருங்கள்.
தேர்வு நெருங்கும் கடைசி நேரம் வரை தேர்விற்கு தயார்செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேர்விற்கு முந்தைய நாள் நன்கு தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டு தேர்விற்கு புத்துணர்ச்சியோடு செல்லுங்கள்.