சென்னை: பொதுத் தேர்வினை எழுதி முடிக்கவிருக்கும் மாணவ மாணவியர்களுக்காக அரசு தமிழகம் முழுவதும் 571 இடங்களில் வழிகாட்டும் முகாம்களை ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் அடுத்து என்ன படிக்கலாம், படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பற்றி புரிந்து கொள்ளும் வகையில் இந்த வழிகாட்டும் முகாம்கள் 6 ஏப்ரல் 2017 மற்றும் 7 ஏப்ரல் 2017 அன்று நடத்தப்பட உள்ளது.
571 இடங்களில் வழிகாட்டும் முகாம்
அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 571 இடங்களில் வழிகாட்டும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டும் முகாம்கள் மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகராட்சிகளில் 6 ஏப்ரல் 2017ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் 7 ஏப்ரல் 2017ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.பி.ஐ வளாகம்
மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டு முகாம்கள் குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் நேற்று சென்னை டி..பி.ஐ வளாகத்தில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் பலர் பேசினார்கள்.
வழிகாட்டும் கையேடு
டி.பி.ஐ வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் கையேட்டினை வெளியிட்டார். மேலும் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் வெளியிட்டார். கையேட்டின் முதல் பிரதியை தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன தலைவர் பா. வளர்மதி பெற்றுக் கொண்டார்.
15 லட்சம் மாணவர்கள்
கருத்தரங்களில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் வேலை வாய்ப்புப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகம் முழுவதும் இந்த வழிகாட்டு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு நேர்மையான வெளிப்படையான அரசு மாணவர்களின் நலனின் அக்கறைக் கொண்ட அரசு எனக் கூறினார். மேலும் 15 லட்சம் மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது எனவும் கூறினார்.
குறைகள் களையப்படும்
தமிழ் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கழிவறைகள் உள்ளிட்ட அனைத்த குறைகளும் களையப்படும். வருகிற 6 மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். ஆய்வக உதவியாளர் நியமிப்பதற்காக தேர்வு முடிவுகள் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். மேலும் போதிய ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டில் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.