சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக அரசு தமிழகம் முழுவதும் 1162 வழிகாட்டும் முகாம்களை (06.04.2017) இன்றும், (07.04.2017) நாளையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதற்காக இந்த வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த பின்பு மாணவ மாணவியர்கள் என்ன படிக்கலாம், எந்த கோர்ஸ் படிக்கலாம், படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது பற்றி தெளிவாக மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்வதற்காகவே வழிகாட்டும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு தங்கள் எதிர்காலத்தைக் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை.
வழிகாட்டும் முகாம்
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் வகையில், இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 162 ஆலோசனைக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.
கையேடுகள்
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்மாரில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைக் கருத்தரங்கினை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். முகாமில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் வழங்கப்படுவதோடு அதற்கான கையேடுகளும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
சுயவேலைவாய்ப்பு விபரங்கள்
பள்ளிக் கல்வித்துறை வழங்கும் கையேடுகளில், 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான படிப்புகள் பற்றி விவரங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. மேல்நிலையில் படிப்பதற்கு 4 குரூப்புகள் என்ற எண்ணத்தை தகர்த்து, தொழில் கல்வி பிரிவுகள், கல்வி உதவித் தொகை திட்டங்கள், திறனறித் தேர்வுகள், பாலிடெக்னிக், ஐடிஐ, பொறியியல் தொழில் பிரிவுகளுக்கான ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள், தொழில்பழகுநர் பயிற்சி தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை உள்ள விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ன.
முழுமையான தகவல்கள்
12ம் வகுப்பு மாணவர்களை பொறுத்த வரையில் மருத்துவம், பொறியியல் அதைவிட்டால் கலை அறிவியல் கல்லூரிகள் என்ற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. ஆனால் இவற்றைத்தாண்டி இன்று எத்தனையோ படிப்புகள் உள்ளன. அதுப்பற்றிய விபரங்கள் அரசு கையேட்டில் முழுமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
தொழில்முனைவு சார்ந்தும், சுயதொழில் செய்வதற்கும் குறுகிய கால படிப்புகள், மத்திய-மாநில அரசுகளின் கல்வி உதவிகள், தேசிய அளவிலான 30-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள், அவற்றிற்கு தயாராவதற்கான வழிமுறைகளை விளக்கும் கையேடுகளும் கருத்தரங்களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்
12ம் வகுப்பு மாணவர்களுக்கான கையேட்டில், மருத்துவம், பொறியியல் மற்றும் அவை சார்ந்த படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், வணிகவியல் படிப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான படிப்புகள், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன்மேம்பாடு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான 31 நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களும் பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் மாணவர்களின் எதிர்காலத்தை குறித்த விழப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அரசு வழிகாட்டும் முகாம்கள் வரவேற்கத்தக்கவைகளாகும்.