சென்னை : அரசு பஸ்ஸில் பயணிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி (7) பள்ளிக்கூட வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்தது நெஞ்சை உளுக்கும் சம்பவமாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதி மன்றம் தானகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் தமிழக அரசு பள்ளி வாகனங்களுக்கென சிறப்பு விதிமுறைகளை கையாள வேண்டும் என உத்தரவிட்டது.
விதிமுறைகள்
உயர்நீதி மன்ற உத்தரவின் படி தமிழக அரசு பள்ளி வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாவணர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் வேகத்தடை கருவிப் பொருத்தப்பட வேண்டும் என பல்வேறு சிறப்பு விதிமுறைகளை ஏற்படுத்தியது.
வழக்கு தொடரப்பட்டது
மேற்கண்ட சிறப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை என தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகள் சார்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார்.
உயர்நீதி மன்ற உத்தரவு
தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் அரசுப்பேருந்தில் பயணம் காலை மாலை என இருவேளையும் பயணம் செய்பவர்களில்
மூன்றில் இரு மடங்கு அரசு பள்ளி மாணவர்களே. அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் கூறினார். அரசுப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமைதான் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு முடிவு
அதேநேரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனியார் பள்ளி வாகனங்களை சிறப்பு அரசு அதிகாரி முன்பாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதைத்தவிர வேறு எந்த சிறப்பு விதிமுறைகளிலும் தளர்வுக் கொண்டு வர முடியாது அது மாணவர்களின் பாதுகாப்பிற்கு பங்கமாக அமைந்துவிடும். எனவே வேறு மாற்றங்கள் ஏதும் கிடையாது எனக்கூறி உயர்நீதி மன்றம் வழக்கை முடித்தது.