சென்னை : இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு 1,400 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஜூன் 28ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடை நிலை ஆசிரியர் பயிற்சிக்கு குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பம் சமர்ப்பிதற்கான காலக்கெடு 28ந் தேதி வரை நீட்டிக்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 48 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 34 அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 321 சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் உள்ளன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு சேர்க்கப்படுகிறார்கள். இது இரண்டு ஆண்டுகால படிப்பாகும்.
காலஅவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர கடந்த மாதம் மே 31ந் தேதியில் இருந்து ஜூன் 21ந் தேதி நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை 1400 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார்கள். குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால் ஜூன் 28ந் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tnscert.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உடனே வேலை
10 வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை உடனுக்கு உடன் பெற்று வந்தனர். அதன் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ளன.
பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடல்
இப்படி பல காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவ மாணவியர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன.