சென்னை: அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளுக்காகச் செல்லவிருக்கும் மாணவர்களுக்காக ஒருங்கிணைப்புப் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சியை எஜுகேஷன் யுஎஸ்ஏ அமைப்பு நடத்துகிறது. அமெரிக்காவில் பயிலச் செல்வதற்கு முன் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க கலாசார வாழ்க்கை தொடர்பான விஷயங்கள், பிரயாணத் திட்டமிடுதல், விசா விவரம், அங்குள்ள கல்வி சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து விளக்கம் செய்யப்படும். மேலும் இந்திய மாணவர்களை அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட தயார்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
2015-16-ம் கல்வியாண்டில் பயிலச் செல்லும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை எஜுகேஷன்யுஎஸ்ஏ வழங்குகிறது. இந்தியா எஜுகேஷனல் பவுண்டேஷனுடன் இணைந்து இந்தப் பயிற்சியை ஜூலை 10-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னையில் நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் செய்து வருகிறது.
மேலும் இந்த ஒருங்கிணைப்புப் பயிற்சியில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள், பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சந்தேகங்களுக்கு விடையளிப்பர். மொத்தத்தில் அமெரிக்காவுக்குப் புறப்படும் இந்திய மாணவர்களை, அமெரிக்காவுக்கு ஏற்ற விதத்தில் எல்லா விதத்திலும் தயார் செய்வதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
இந்தப் பயிர்சியில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/1bsqjZf. என்ற இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியில் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம். தேவைப்பட்டால் 044-28574134 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.facebook.com/EducationUSAChennai. என்ற ஃபேஸ்புக் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.
எஜுகேஷன் யுஎஸ்ஏ அமைப்பு உலகம் முழுவதும் 170 நாடுகளில் மையங்களை ஏற்படுத்தி மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களின் ஓர் அங்கம்தான் எஜுகேஷன் யுஎஸ்ஏ.