சென்னை : திருவாரூரில் உள்ள அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் இயங்கி வரும் பள்ளி. இந்தப் பள்ளியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் அதிகமாக கல்வி கற்று வருகிறார்கள்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை முறையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் பெண்கள் ஊக்குவிப்புத் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. பல மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுவதே தெரியாது என கூறுகின்றனர். இதனால் பழங்குடியினர் மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கல்வி உதவித் தொகையில் முறைகேடு
6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ. 1000, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ. 1500, 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ. 2250 ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். பெண்கள் ஊக்குவிப்புத் தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதால். பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. பெண்கள் பள்ளிப்படிப்பை தொடர்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவித் தொகையை வழங்குவதில் முறைகேடு செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், மாணவிகள் புகார்
தலைமை ஆசிரியரிடம் இதுக் குறித்து கேட்டதற்கு ஏப்ரல் மாதம்தான் உதவித் தொகை வந்துள்ளது. இனிமேல்தான் கொடுப்போம் எனவும் கடந்த ஆண்டு கொடுத்தமா இல்லையா என தெரியவில்லை என பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். உதவித் தொகையை தலைமை ஆசிரியர் எடுத்துக் கொள்வதாகவும் சரியாக உதவித் தொகை வழங்கப்படுவதில்லை எனவும் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். 2013ம் ஆண்டிலிருந்தே கல்வி உதவித் தொகை முறையாக வழங்கப்பட வில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர். கல்வி அதிகாரி பொறுப்பு வகித்த பள்ளியில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
பெண்கல்வி தடைபடுகிறது
மாணவிகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஆனால் அந்த உதவித் தொகை மாணவிகளை சரிவர சென்றடைவதில்லை. இந்தப் பள்ளியைப் போல் பல பள்ளிகளில் இது போல முறைகேடு நடக்கிறது. அதை அரசு கண்காணித்து மாணவிகளுக்கு உரிய முறையில் கல்வி உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். இதனால் பெண்கல்விக்கு தடை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக மாணவிகள் படிக்க முடியாமல் போகிறது.
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பெண்கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றதற்கு சமம் என்பர். பெண்கல்வியை ஊக்குவிக்க வேண்டிய படித்த தலைமை ஆசிரியரே அதற்கு தடையாக இருப்பது சமுதாயச் சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகும். இந்த சம்பவத்தால் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இதுக்குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கல்வி உதவித் தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று செயல்படும் அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை சரிவர கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும்.