சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதிதான் சம்பளம் கிடைக்கும் என்று கருவூலத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 7 லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோர் இருக்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 ம்தேதி அல்லது 31ம் தேதி சம்பளம் போடுவார்கள். அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். ஆனால் இந்த மாதம் 31ம் தேதி மேற்கண்டபடி வரவு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருவூல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு நிதியாண்டு இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் வங்கிகள் ஆண்டு வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. மேலும் ஏப்ரல் 1ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. அடுத்து 2ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 3ம் தேதி புனித வெள்ளி. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி, 5ம் தேதி சனி, ஞாயிறு தினங்கள். அதனால் அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. இந்த நாட்களில் கருவூலத்துக்கும் விடுமுறை நாள் என்பதால் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல்கள் கருவூலத்தில் இருந்து வங்கிக்கு செல்லாது.
6ம் தேதி அன்று தான் ஊதியப் பட்டியல்கள் வங்கிகளுக்கு செல்லும். தொடர் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் 6ம் தேதி திறப்பதால் அனைத்து ஊதியப்பட்டியல்களுக்கும் பணப் பட்டுவாடா செய்வது கடினமாக இருக்கும். அதனால் முதலில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கிவிட்டு, அடுத்தகட்டமாக ஓய்வு ஊதியதாரர்களுக்கு வழங்குவார்கள்.
இதனால் ஒய்வு ஊதியம் பெறுவோர் 8ம் தேதி அல்லது 10ம் தேதி தான் பணம் பெற முடியும்.