சென்னை : மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கியூசெட் தேர்வாகும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் ஏப்ரல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறவர்களுக்கு கியூசெட் என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
கியூசெட் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களே மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க முடியும்.
2017ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு, மே 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 14) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் 5 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி வரை கியூசெட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான நுழைவுச் சீட்டு மே 5ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வுக்கான சரியான விடைகள் 29 மே அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் மாதம் 7ம் தேதி கியூசெட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்
ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ. 800 விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வங்கிக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ. 350 விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வங்கிக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.
கல்வித்தகுதி
12ம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலைப் படிப்பிற்கும், பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
கியூசெட் தேர்விற்கு தேவையான ஆவணங்கள்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புச்சான்றிதழ், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்புச் சான்றிதழ், கியூசெட் நுழைச் சீட்டு, ஒரிஜினல் அடையாளச் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தகுதிபெற்ற தேசிய நிலை தேர்வு மதிப்பெண் அட்டை (தேவைப்படுபவர்களுக்கு மட்டும்) ஆகிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
கியூசெட் தேர்வு
கியூசெட் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படும். தேர்வில் மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான கேள்விகளுக்கும் .25 நெகட்டிவ் மார்க் உண்டு.
மேலும் விபரங்களுக்கு இணையதளத்திற்குச் சென்றுப் பார்க்கவும்.