சென்னை : சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சிபெற்று முத்திரை பதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 99.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முடிவுகள் இணையதளத்தில்...
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
14.89 லட்சம்
திருவனந்தபுரம், சென்னை, தில்லி உள்ளடக்கிய 10 மண்டலங்களில் 14,89,021 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 14,31,861 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 96.36 சதவீதம் மாணவிகளும், 96.11 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி குறைந்தது
ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 96.21 ஆகும். இது கடந்த ஆண்டை (97.32) விட இந்த ஆண்டு 1.11 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.87 சதவீதமாகவும், அதற்கு அடுத்தபடியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.85 சதவீதமாகவும் உள்ளது.
தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.72 சதவீதமாகவும், மாநில அரசுகளின் கண்காணிப்பில் இயங்கும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.61 சதவீதமாகவும் உள்ளது.
மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களில் 95.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்கள் முந்தினர்
மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர்கள் மாணவிகளை முந்தியுள்ளனர். 85,316 மாணவர்கள் 10 புள்ளிகளை (சிஜிபிஏ) பெற்றுள்ளனர். மாணவிகளில் 83,225 பேர் மட்டும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆந்திரம்
இதற்கு அடுத்ததாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்தில் அதிகபட்சமாக 99.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தெலங்கானாவில் 99.83 சதவீதமும், தமிழகத்தில் 99.78 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 99.68 சதவீதமும், கோவாவில் 99.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்தமான்-நிகோபால் தீவுகள்
அந்தமான்- நிக்கோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய இடங்களில் முறையே 97.76 சதவீதம், 93.88 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை பள்ளிகள் அளவில் 6,226 பேரும், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் 32,303 பேரும் எழுதினர். இதில் 86 பேர் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. இந்தத் தேர்ச்சி சதவீதம் 99.78 ஆகும்.
சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்தில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர். அதன்படி, நாட்டில் இரண்டாமிடத்தை சென்னை மண்டலம் பிடித்துள்ளது என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் கே. சீனிவாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மூன்றாவது ஆண்டாக...
மூன்றாவது ஆண்டாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம் கிடைத்துள்ளது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மூன்றாம் ஆண்டாக திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது.பஞ்சகுலா மண்டலம் 98.4 சதவீத தேர்ச்சியுடன் 3-ஆவது இடம் பிடித்தது.
சிறப்புத் துணைத் தேர்வுகள்
பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 16-ஆம் தேதியில் இருந்து சிறப்புத் துணைத்தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இதை எழுத விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.