சென்னை : நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே வகையான தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மத்திய மனித வளத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ந் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்வு தமிழக மாணவ மாணவியர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஈஸியாகத் தேர்வு இருந்தது எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வுக் கடினமானதாகவே இருந்தது.
மருத்துவப் படிப்பிற்கு 1 கோடி
அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு மட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெறாமல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணம் கொடுத்தும் படிக்க முடியாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ஒரு கோடி முதல் ரூ.1½ கோடி வரை செலவு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் 5 லட்சம் மட்டுமே
இத்தகைய சூழ்நிலையில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு இருப்பதால் பெற்றோர்களும் அதனை விரும்புகிறார்கள். 5½ ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது என்பதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளி நாடுகளில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
ரஷ்ய கலாச்சர மையம் கண்காட்சி
வெளிநாடுகளில் படிப்பதற்கான ஏஜென்சிகள், கல்வி மையங்கள், மற்றும் ரஷ்ய, கலாசார மையம் போன்றவை ஏற்பாடு செய்து வருகின்றன.கடந்த காலங்களை காட்டிலும் இந்த வருடம் வெளிநாடுகளில் அதிகளவு மாணவர்கள் படிக்க முன்பதிவு செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலாச்சார மையம் கல்வி கண்காட்சியையும் 13, 14 தேதிகளில் நடத்துகின்றது.
தகுதித் தேர்வு
வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு வந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும். பொது நுழைவுத் தேர்வு நடத்தினாலும் டாக்டர்கள் பணி நியமனத்திற்கு தனியாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த செலவில் படிப்பவர்களை தவிர மற்றவர்கள் இனி வரும் காலங்களில் வெளி நாடுகளில் சென்று படிப்பதே அவர்களுக்கு நலன் பயக்கும் எனக் கருதப்படுகிறது.