டெல்லி: நாட்டிலுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலைத் தயார் செய்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் இந்த பல்கலைக்கழங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது அந்த நிறுவனத்தின் தரத்தை ஆராய்வதற்கு உதவியாக ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டில் நாட்டில் மொத்தம் 9 மாநிலங்களில் 22 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 9 போலி பல்கலை.கள் உள்ளன. அடுத்தபடியாக டெல்லியில் 5 பல்கலை.கள் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் 2 போலி பல்கலை.களும், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஒடிஸா, பிகார் மாநிலங்களில் தலா ஒரு பல்கலை.யும் போலிப் பட்டியலில் உள்ளன.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் புத்தூரில் செயல்பட்டு வரும் டிடிபி சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் போலி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.