சென்னை ; சட்டப்படிப்புக்கு அரசு சட்டக் கல்லூரிகளில் ஜூன் 2ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 2ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் மதுரை, திருச்சி, கோவை திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், ஆகிய இடங்களில் உள்ள 10 அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்பில் (இளங்கலை சட்டப்படிப்பு) 1,292 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் ஜூன் 2ந் தேதி முதல் 23ந் தேதி வரை வினியோகிக்கப்படும். இதில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விநியோகம்
அதேபோல் 10 அரசு சட்டக்கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேருவதற்கு ஜூன் 7ந் தேதி முதல் ஜூலை 17ந் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். இந்தப் படிப்பில் 1,502 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மேலும் விபரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
3 புதிய சட்டக் கல்லூரிகள்
இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 2017-2018ம் கல்வியாண்டில் விழுப்புரம், இராமநாதபுரம், தருமபுரி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லுரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வாய்ப்பு
3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் சட்டக்கல்லூரி படிப்பில் சுமார் 80 பேர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் பல்கலைக்கழகம்
மூன்று புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்காகவும் இதர தேவைகளுக்காகவும் 6.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவ மாணவியர்கள் புதிதாக தொடங்கப்படும் சட்டக்கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.