சென்னை : பெற்றோர்களுக்கு பள்ளி சென்ற குழந்தை வீட்டுக்கு பாதுகாப்பாக வந்து சேரும் வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பயம் இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் இன்றைக்கு பல இடங்களில் நடக்கும் சம்பவங்கள் நம்மை பயத்திற்குள்ளாக்குகிறது
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்ற பாடல் நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.
1. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
2. தன்னுடன் பயிலும் மாணவ மாணவர்களை சகோதர சகோதரியாகப் பார்த்து பழக வேண்டும். நல்ல பழக்கம் மற்றும் ஓழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று சிறுவயது முதலே கற்றுக் கொடுக்க வேண்டும்.
3. அதிகாலையில் எழும் பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இரவு நேரங்களில் நேரத்தோடு படுக்கை அறைக்கு செல்லுமாறு வலியுறுத்த வேண்டும். அதிகமாக செல்போன்களில் படம் பார்ப்பது மற்றும் கேம்ஸ் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும்.
4. தினமும் பள்ளிப் பாடங்களை தவறாமல் படித்து முடித்து விட்டு தூங்கச் செல்ல வேண்டும் என்றும் பழக்கப்படுத்த வேண்டும். மாலை வேளைகளில் சிறிது நேரம் விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.
5. வேலைக்கு செல்லும் பெற்றோர்களாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெற்றோர்களாக இருந்தாலும் சரி பள்ளி சென்று வந்த உடன் உங்கள் குழந்தைகளிடம் சற்று நேரம் செலவழித்து அவர்களிடம் இன்று பள்ளியில் என்ன நடந்தது. பள்ளியில் இருந்து வரும் வழியில் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
6. பள்ளியில் குழந்தை யார் யாருடன் பழகுகிறார்கள். வீட்டின் அருகில் அவர்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
7. சிறு குழந்தைகளுக்கு நல்ல கதைகள் நல்ல விஷயங்களைப் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இறைவன் ஆண், பெண் என இருவரையும் சமமாகத்தான் படைத்துள்ளார். ஆணுக்கு அடித்தாலும் வலிக்கும், பெண்ணுக்கு அடித்தாலும் வலிக்கும். நம்மை போலத்தான் நாம் பிறரையும் பாவித்து பழக வேண்டும் என்று பெற்றோர்கள் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
8. எது நல்லது, எது கெட்டது என்று புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தரவேண்டும். துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல குழந்தைகள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு சிறு சிறு நீதிக்கதைகளைப் பெற்றோர்கள் சொல்லி குழந்தை புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
9. இன்றைய பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறு குழந்தைகள் அதிகமாக தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கையில் செல்போனைக் கொடுத்து விளையாடச் சொல்லுகிறார்கள். செல்போனில் குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதினால் அவர்கள் உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுகிறது.
10. தினமும் குளித்து நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது போல நம் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் நம் கடமைகளை ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கும் போது கட்டாயம் எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தையாகத்தான் வளரும். அவர்களின் எதிர்காலமும் இன்பமாக இருக்கும்.
குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். அவர்களின் நிகழ்காலம் காக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். அது நம் அனைவரின் கடமையாகும்.