சென்னை : 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவைச் சாந்த மாணவர்களும் சி.ஏ மற்றும் சி.எஸ் படிப்புகளில் சேர்ந்து பயிலலாம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்
பிளஸ் 2வில் அக்கோடன்சி குரூப் மாணவர்கள் மட்டுமல்லாது அறிவியல் மாணவர்களும் ஆடிட்டர் மற்றும் கம்பெனி செக்ரட்டரி ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும்.
கடின உழைப்பு
சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் போன்ற படிப்புகள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
மூன்றுகட்டத் தேர்வுகள்
ஆடிட்டிங் துறையில் மொத்தம் மூன்றுக்கட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்வும் நடத்தப்படுகிறது இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது.
நல்ல சம்பளம்
பயிற்சிக்கு பின்பு கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முதல் வேலைவாய்ப்பிலேயே மாதம் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் கடின உழைப்பும் கண் இமைக்காத படிப்பும் தேவை. கடினமாக உழைத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நல்ல சம்பளம் கட்டாயம் கிடைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
தொழில் நிறுவன படிப்புகள்
அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன் ஒரே ஆண்டில், சி.ஏ. ஐ.சி.டபிள்யூ.ஏ மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.
வாய்ப்பு அதிகம்
படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எந்த துறையில் வாய்ப்பு அதிகம் உள்ளது வளர்ச்சி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே ஆண்டுக்கு மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன.
கவனம் தேவை
படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.