சென்னை : கிராம பகுதியில் உள்ள அரசு டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மருத்துவ மேற்ப்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சார்ந்த டாக்டர் ராஜேஷ் வில்சன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக கோவை சோலையார்நகர் என்ற கிராமத்தில் உள்ள ஆராம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறேன்.
2017-18ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் பங்கேற்று 824.58 மதிப்பெண் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 26 ஆயிரத்து 525வது இடத்தில் உள்ளேன்.
இந்திய மருத்துவ கவுன்சில்
மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2000 பிரிவு 9(ஏ)ன் படி அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரிந்தால் அவர்களுக்கு பணி புரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது.
30 சதவீத மதிப்பெண்
அதாவது நீட் தேர்வில் நான் பெற்ற மொத்த மதிப்பெண்ணில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற ரீதியில் 3 ஆண்டு 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக எனக்கு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
10 மதிப்பெண்
2017-18ம் ஆண்டுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேட்டில் மலைக்கிராமங்கள், குக்கிராமங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த முன் அனுபவத்திற்கு அதிகப்டசமாக 10 மதிப்பெண் மட்டுமே கூடுதலாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அரசு தரப்பில் எதிர்ப்பு
நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கினால் மருத்துவ மேற்படிப்பில் எளிதாக இடம் கிடைக்கும எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பு வக்கீல் இவரது கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
புதிய சட்ட மசோதா
தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான புதிய சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் அந்த மசோதா அமலுக்கு வரவில்லை. எனவே அந்த மசோதா மனுதாரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என நீதிபதி கூறினார்.
கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு
மேலும் மலைக்கிராமங்கள். குக்கிராமங்கள், மற்றும் ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க முடியாது என தமிழக அரசு மறுக்க முடியாது. அதனால் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் எனறு கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.