சென்னை : மருத்துவ சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவ மாணவியர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்படும். அதற்கான அரசாணை ஜூன் 22ந் தேதி வெளியிடப்பட்டதாக சுகாதரத்துறை அமைச்சர் அறிவிப்பு
நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ந் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 32,368 மாணவ மாணவியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். 38.83% தேர்ச்சி விகிதத்தையே தமிழ் நாடு நீட் தேர்வில் பெற்றுள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்தில் கோவையைச் சார்ந்த ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260வது இடத்தைப் பெற்றுள்ளார்.
சென்னையைச் சார்ந்த கே. ஆதித்யா பிரணவ் 648 மதிப்பெண் எடுத்து 2வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 351வது இடத்தைப் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா ஸ்ரீநிவாசன் 646 மதிப்பெண்ணை எடுத்து 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 391வது இடத்தைப் பெற்றுள்ளார்.
முதல் 25 இடங்கள் பெற்றவர்களில் தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் இடம் பெறவில்லை. நீட் தேர்விற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 14ந் தேதி வெளியிடப்படும், நீட் கலந்தாய்வு ஜூலை 17ந் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதமுள்ள 85% இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலமும் நிரப்பப்படும். 85% இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ மாணவியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மீதமுள்ள 15% இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட மற்ற பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை ஜூன் 22ந் தேதி வெளியிடப்பட்டதாக சுகாதரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கலந்தாய்வு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.