சென்னை : வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. கடந்த வருடம் 2016ம் ஆண்டு மட்டும் 81.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் விபரங்கள் தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் இந்தக் கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு இறுதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் அரசு வேலை வாய்ப்பிற்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
பெண்கள்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 41 லட்சத்து 98 ஆயிரத்து 252 பேர் பெண்கள் அரசு வேலைக்காக தங்கள் பெயரினை பதிவு செய்துள்ளனர்.
அரசு வேலையை விரும்பும் பெண்கள்
இன்றைய சமுதாயச் சூழலில் ஆண் பெண் என இருபாலரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும் என்பதினால் பெண்களும் அதிகமாக வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் தனியார் நிறுவன வேலைகளைவிட அரசு வேலைகளையே அதிகம் விரும்புவதால் பெண்களின் எண்ணிக்கை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் அதிகரித்துள்ளது.
பட்டதாரிகள் விபரம்
பொறியியல் பட்டம் படித்தவர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 56 பேர் தங்கள் பெயரினை அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். கலைக்கல்வி பட்டம் படித்தவர்கள் 4 லட்சத்து 43 ஆயிரத்து 940 பேர் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் 5 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேர் ஆகிய அனைத்துப் பட்டதாரிகளும் தங்கள் பெயரினை அரசு வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர்.
இணையதள விபரம்
அனைத்து பதிவாளர்கள் பற்றிய தகவல்களும் தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள www.employmentnews.gov.in என்ற இணைய தள முகவரியை அனுகவும்.