சென்னை: தமிழ்நாட்டில் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது.
மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ. 60 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அதிகமானத் தொகையாகும்.
தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஆண்டு கல்விக் கட்டணத்தை அறிவித்துள்ளன. ஒவ்வொரு படிப்புக்கும் அவற்றின் வகையைப் பொறுத்து ரூ. 3 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கல்விக்கட்டணம் பலமடங்கு உயர்வு
மருத்துவ மேற்படிப்புக்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் என்பது மிக மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணங்கள் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தன. ஆனால் இப்போது நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதால், மருத்துவ இடங்களை விற்க முடியாது என்பதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்வதற்காகத்தான் கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
புதுச்சேரியில் கட்டணம்
புதுச்சேரியில் சிகிச்சை சார்ந்த முதுநிலைப் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சமும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 13 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை சாராத படிப்புகளைப் பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 2.5 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3.5 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 மடங்கு கூடுதல் கட்டணம்
ஆனால் புதுச்சேரியை விட தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மருத்துவ மேற்படிப்பு படிக்க ஆசைப்படுபவர்கள் இவ்வளவு கட்டணம் விதிக்கப்பட்டால் எப்படி படிப்பார்கள். அவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகிவிடும். அரசு உடனே இதில் தலையிட்டு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய முறை ஆகியவற்றை பின்பற்றி தமிழகத்திலும் தனியார் மருததுவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.