சென்னை : 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் எடுத்த சுகந்தி 11ம் வகுப்பில் கேட்ட குரூப் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்த வந்த சுகந்தி என்ற மாணவி 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
பள்ளியில் அவர் வணிகவியல் குரூப் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவி என்ற காரணத்தினால் பள்ளி நிர்வாகம் கணினி அறிவியல் (முதல் குரூப்) குரூப்பை எடுத்து படிக்குமாறு வற்புறுத்தி உள்ளது. தான் கேட்ட வணிகவியல் குரூப் கிடைக்காததால் சுகந்தி மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார்.
இதை அடுத்து இன்று தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவ மாணவியர்கள் தரத்தை மிதிப்பிடுவது என்பது மிகவும் தவறான செயலாகும். கல்வி என்பது மாணவர்களை வாழ்வின் தரத்தை உயர்த்துவதாக அமைய வேண்டும். அவர்கள் உயிரை பறிப்பதாக அமையக் கூடாது. மாணவர்களின் விருப்பு வெறுப்புக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
10ம் வகுப்பில் 470 மதிப்பெண்
470 மார்க் எடுத்து வணிகவியல் படித்து பெரிய ஆளாக வந்திருக்க வேண்டிய மாணவி இன்று மறைந்து விட்டது மிகவும் வேதனைக்குரிய சம்பவமாகும். இந்தச் சமுதாயம் ஒரு நல்ல மாணவியையும், கல்வியாளரையும் இழந்து விட்டது.
5 வருடங்களில் 39,775 பேர் தற்கொலை
39,775 பேர் கிட்டத்தட்ட கடந்த ஐந்து வருடத்தில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துள்ளனர். தேர்வுக்குறித்த பயம், தேர்வு முடிவுக் குறித்த பயம், தோல்வியை எதிர்கொள்ள தைரியம் இல்லாத தன்மை, தான் நினைத்த மதிப்பெண் கிடைக்காத காரணம், என பல காரணத்தினால் மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொள்ளுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சாதனையாளர்களை சாகவிடாதீர்கள்
பள்ளியிலும், வீட்டிலும் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியே இதற்கெல்லாம் காரணமாக அமைகிறது. தயவு செய்து மாணவ மாணவியர்களை வெறும் மதிப்பெண் பெறும் எந்திரமாக மட்டும் எண்ணாதீர்கள். அவர்கள் விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கல்வி என்பது பல சாதனையாளர்களை உருவாக்குவதாக மட்டுமே அமைய வேண்டும். பலருடைய சாவுக்கு காரணமாக அமையக் கூடாது.
வாழ்வியல் பாடங்கள்
இந்த சமுதாயம் மாணவ மாணவியர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல கல்விமட்டும் வாழ்க்கை அல்ல அத்துடன் நல் நம்பிக்கை, தன்னம்பிக்கை, தைரியம், எதையும் எதிர்கொள்ளும் தன்மை, பாஸிட்டிவ் திங்ஸ் என பல வாழ்வியல் பாடங்களும் பள்ளியிலும் வீட்டிலும் மாணவ மாணவியர்களுக்கு கற்றுத் தரப்படவேண்டும்.
இன்றைய இளைஞர்கள் நாளைய எதிர்காலம், எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே அழித்துவிடாதீர்கள்.