சென்னை : தமிழகத்தில் பொதுத் தேர்வு ரிசல்ட் பயத்தால் வீட்டை விட்டு வெளியேறிய 450 பேர்களில் 265 பேரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வீட்டை விட்டு வெளியேறிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடியும் நிலையில் ஓட்டம் பிடிக்கும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேர்வு முடியும் நிலையில், பெற்றோரை போலீசார் உஷார்படுத்திகின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறியவர்கள்
2015ம் ஆண்டு மொத்தம் 635 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வு முடிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினர் அதில் 495 பேரை போலீசார் கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 2016ம் ஆண்டு 835 பேர் பொதுத் தேர்வு முடிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினர். அதில் 690 பேர் போலீசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
பெற்றோர்கள் புகார்
இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி பொதுத் தேர்வு முடிந்த நிலையில் இதுவரை 450 மாணவ, மாணவியர்கள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதில், 310 பேருடைய பெற்றோர்கள் மட்டுமே போலீசில் புகார் அளித்துள்ளனர். இதல் 265 பேர் நேற்று மதியம் வரை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் ரோந்துப் பணி
தேர்வு முடியும் நிலையில் மாணவ மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளாக அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வண்ணமாக பெற்றோர்களையும் பொதுமக்களையும் காவல் துறையினர் உஷார்ப்படுத்தி வருகின்றனர். பொதுத் தேர்வு முடிந்த மார்ச் 31ம் தேதி மதியம் முதல் கடந்த ஒன்பது நாட்களாக பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், பூங்காக்கள் உட்பட பொது இடங்களில் போலீசாரின் ரோந்து பணித் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்களே உஷார்
சந்தோகப்படும் படியான மாணவ மாணவியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதால் வீட்டை விட்டும் வெளியேறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது.ஏப்ரல் 30ம் தேதி வரை போலீசாரின் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதங்களில் பொதுத்தேர்வு முடிவு அறிவிப்பு வெளியாக இருப்பதால் பெற்றோர்களும் பாதுகாவலரும் உஷ்ராக இருக்க வலியுறுத்தப்படுகின்றனர்.
வன்முறைச் செயல்
பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் மதிப்பெண்கள் குறைவாக எடுததாலும், தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்களை கோபமாக பேசுதல், அடித்தல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடாது.
பெற்றோர்களுக்கு அறிவுரை
தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தேர்வு முடிவு வெளியாகும் போது மாணவ மாணவியர்கள் தனிமையில் இருப்பது அல்லது தனி அறையில் இருப்பதைத் தடுக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.