சேலம் : சேலத்தில் நீட் தேர்வுக்கு தாமதமாக வந்த 3 மாணவர்களுக்கு தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருததுவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது.
சேலம் 3 ரோடு அருகே வித்யா மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு காலை 9.32 மணிக்கு ஓசூரைச் சார்ந்த மாணவி விஷாந்தினி, ஓமலூரைச் சார்ந்த மாணவர் இன்பரசன் ஆகிய 3 பேர் வந்தனர். 2 நிமிடங்கள் தாமதமாகிவிட்டதால் அவர்களை செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
தேர்வு மைய அதிகாரிகள்
இதனால் அங்கிருந்த அதிகாரிகளுடன் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்வு மைய அதிகாரிகள் எங்களுக்குகு அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி காலை 9.30 மணிக்கு மேல் வருபவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.
சாலை மறியல்
ஆனால் தங்கள் பிள்ளைகளின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து விட்டதே என்று ஆவேசமடைந்த பாதிக்கப்ட்ட மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்த மற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தேர்வு மையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 மாணவர்களுக்கும் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் ஏமாற்றம்
இதையடுத்து தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் பெற்றோர்கள் மறியலை கைவிட்டனர். இருந்தபோதும் அனுமதி கிடைக்காததால் 3 மாணவர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட ஓசூரைச் சார்ந்த மாணவி பார்கவி கூறுகையில் ஓசூரில் இருந்து தேர்வு மையத்தை கண்டுபிடித்து வருவதற்குள் காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் நான் காலை 9.32 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்தேன். 2 நிமிடம் தாமதமாகிவிட்டதால் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
மருத்துவக் கனவு தகர்ந்தது மாணவி கண்ணீர்
ஒரே பெயரில் பல தேர்வு மையங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி போக்குவரத்து பாதிப்பு, கூட்ட நெரிசல் இவற்றை கடந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வர வேண்டிய கட்டாயம் இருந்தது. 2 நிமிடம் தாமதத்தால் என்னுடைய மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து விட்டது. எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. இனி எப்படி மருத்துவ படிப்பில் சேருவேன். எங்களை போன்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.