சென்னை : பத்தாம் வகுப்புத் தேர்விற்கான முடிவு மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. முடிவு வருவதற்கு முன்னரே பல பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் முடிவடைந்தது அதிர்ச்சியைத் தருகிறது.
பொதுவாக 11ம் வகுப்பு சேர்க்கை என்பது 10ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்துத்தான் கொடுக்கப்படும். எந்தப் பாடப் பிரிவுக்கு எவ்வளவு மதிப்பெண் என்ற விபரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அதற்குப் பின்பு மதிப்பெண்ணுக்கு ஏற்ப 11ம்வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் அதற்குள் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரொம்ப ஓவர்
மாணவ மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் பிளஸ்-1 சேர்க்கை நடைபெறும் என்பதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக பிளஸ்-1 அட்மிஷன் ஓவர்னா இது ரொம்ப ஓவரா இருக்கு.
கணிசமான நன்கொடை
இரு வாரங்களுக்கு முன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில் கணிசமான நன்கொடை பெற்று, பிளஸ்-1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என, அந்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதில், வசதி படைத்தவர்கள், பள்ளிகள் கேட்ட நன்கொடையை வழங்கி, பாடப்பிரிவுகளையும், புக் செய்துவிட்டனர்
பெற்றோர்களின் குமுறல்
மாணவ மாணவியர்கள் கஷ்டப்பட்டு கண்விழித்துப்படித்து என்ன மார்க் வரும் எந்த கோர்ஸ் கிடைக்கும்ன்னு எதிர்ப்பார்த்துக்கிட்டு இருக்கின்ற நேரத்தில் இப்படி காசை வாங்கிட்டு சீட்டைக் கொடுத்துட்டீங்களே இது நியாமா என பெற்றோர்கள் குமுறுகிறார்கள். கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு நினைத்த கோர்ஸ் எடுத்துப் படிக்க முடியலை. காசு இருந்தா எந்த கோர்ஸை வேணும்னாலும் படிக்கலாம் என்கிற நிலை கட்டாயம் மாற்றப்பட வேண்டியது.
கல்வித்துறை
பல பள்ளிகள், இணையதளத்தில் வெளிப்படையாகவே அட்மிஷன் நடத்திய நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதனால் மெரிட் அடிப்படையில் பிளஸ் 1 சேரலாம் என எதிர்பார்த்திருக்கும் ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காதலுக்குத்தான் கண் இல்லைனு சொல்லுவாங்க கல்வித்துறைக்குமா? இப்படி கண்டுக்கொள்ளாமல் கல்வித்துறை இருந்தால் தமிழக மாணவர்களின் கல்வித் தரம் எப்படி உயர்த்தப்படும் என்ற கேள்விக்கு தமிழ அரசு விடை கொடுக்குமா?