சென்னை : 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்புத் தேர்வு எழுத ஆன்லைனில் மே 31ந் தேதி முதல் ஜூன் 3ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்காக சிறப்புத்துணைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 28ந் தேதி முதல் நடைபெற உள்ளது. சிறப்புத்தேர்வுக்கு மே 31ந் தேதி முதல் ஜூன் 3ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. அதற்கான முடிவு மே 19ந் தேதி வெளியிடப்பட்டது.
விண்ணப்பிக்க ஜூன் 3 கடைசிநாள்
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வுக்கு வராதவர்களுக்காக அடுத்த மாதம் 28ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் வருகிற 31ந் தேதி முதல் ஜூன் 3ந் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம்
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதிச்சீட்டு
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம். தனியார் பிரவுசிங் சென்டரில் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கட்டணம்
தேர்வுக்கட்டணம் ரூ. 125 மற்றும், ஆன் லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175ஐ ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக செலுத்த வேண்டும். தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.