சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கியது. தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களுக்கு இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்தது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழகம் முழுவதும் 10லட்சத்து 38ஆயிரத்து 22 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். 619721 மாணவ மாணவியர்கள் தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதியுள்ளனர்.
வாய்பேச இயலாதவர்கள், காது கேளாதோர், கண்பார்வையற்றோர் போன்ற மாணவ மாணவியர்களும் தேர்வினை எழுதுதியுள்ளனர். மாணவர்கள் 2653 மாணவிகள் 1537 என மொத்தம் 4190 மாற்றுத் திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதி உள்ளனர்.
நூற்றுக்கு நூறு
10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்தது. சென்டம் கட்டாயம் எடுப்போம் என தெரிவித்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்டம் மார்க் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விருப்ப மொழித் தேர்வு
விருப்ப மொழித் தேர்வு உள்ள மாணவர்களுக்கு மட்டும் 30.03.2017 வியாழக்கிழமை தேர்வு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மகிழ்ச்சி
10ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் கூறியுள்ளனர். அறிவியல் பாடத்தில் மட்டும் ஒரு கேள்வி கடினமாக இருந்தது ஆனால் அதையும் நாங்கள் எளிதாக கையாண்டுள்ளோம் என கூறியுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டதால் மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தேர்வுத்தாள் திருத்தும் பணி
10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர்களின் தேர்வுத் தாள் திருத்தும் பணி 31.03.2017ம் தேதி வெள்ளிக் கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.