சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மாணவ மாணவியர் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் வரும் மாணவ மாணவியரை கண்காணிப்பாளர்கள் கடுமையாக சோதனை செய்த பிறகே அறைக்குள் அனுமதித்தனர். துண்டுத் ஹால்டிக்கெட்கள் தவிர துண்டுச் சீட்டுகள், புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லகூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர். தேபோல ஷ¨, பெல்ட், ஆகியவற்றை தேர்வு அறைக்கு வெளியில் விட்டுச் செல்லவும் அறிவுறுத்தினர். இது மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லாமல் தேர்வு எழுத சென்றனர்.
இன்று மொழிப் பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது. தமிழகத்தை பொருத்தவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிப்பதால் 6 லட்சம் மாணவ மாணவியர் இன்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதுகின்றனர். 3 லட்சம் மாணவ மாணவியர் ஆங்கிலம் உள்ளிட் பிறமொழியை முதன்மைப் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இதையடுத்து நாளை மொழிப்பாடத்தின் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. 7 மற்றும் 8ம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 9ம் தேதி ஆங்கில மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு தொடங்கியதை அடுத்து மாணவ மாணவியர் உற்சாகத்துடன் தேர்வு எழுதச் சென்றனர். இருப்பினும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த அச்சம் மாணவ மாணவியரிடம் இருக்கிறது. அதற்காக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையும் தடுப்பு ஊசிகள் போடுவது குறித்து அறிவித்துள்ளது.
வழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் நுழைய முடியாத வகையில்தடைகள் போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிலவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பள்ளிகளின் உரிமையாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள் யாரும் தேர்வு நடக்கும் நேரத்தில் அந்த பள்ளி வளாகத்துள்ளே வரக்கூடாது என்றும் தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தவிர எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் வசதிக்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்வுத்துறை அமைத்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் இந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாணவர், பெற்றோர், பொதுமக்கள் தங்கள் தேர்வு தொடர்பான புகார்களை இங்கு தெரிவிக்கலாம். விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ மாணவியரை அந்த பள்ளி நிர்வாகிகள் நேற்றே பள்ளிக்கு அழைத்து ஹால்டிக்கெட்டுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவ மாணவியரும் ஆசிரியர்களை வணங்கி தேர்வு எழுதச் சென்றனர்.