சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அதன் தலைவர் டாக்டர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் மாநிலம் முழுவதும் வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
தேர்வையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் டாக்டர் கே.அருள்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நம்பகத்தன்மையுடன் அனைத்துத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. எனவே, தேர்வு எழுதும் அனைவரும் நம்பிக்கையுடன் படித்து தேர்வு எழுதலாம். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் முதல் தற்போது வரையில் 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் நடந்த குரூப் 1 தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக வெளியிடப்படவில்லை. குரூப் 1, குரூப் 2, வி.ஏ.ஓ. ஆகிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 2016-17ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்வு விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.